Published : 28 Jun 2021 06:34 PM
Last Updated : 28 Jun 2021 06:34 PM

அரசு ஊழியர்கள் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பது சந்தேகமே: செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை

பழைய ஓய்வூதிய திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பது சந்தேகமே என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டுமல்ல அதிமுக வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்து நிர்வாகிகளோடு ஆலோசனை செய்து வருகிறோம். நிச்சயமாக அதிமுக, மதுரைக்கு ஏராளமான திட்டங்களைத் தந்துள்ளது. அந்த திட்டங்கள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளன. அதன் காரணமாக மதுரை அதிமுகவுக்கு மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் கிடைப்பார்கள்.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக அரசு அமைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மகளிருக்கு ரூ.1,000 நிதி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.

அங்கன்வாடி, சத்துணவு, கிராம அலுவலர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாக இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே.

அதிகரித்துள்ள விலைவாசியை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த மக்கள் குழுமி வருகிறார்கள். அதனைத் தடுக்க வேண்டும். டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x