Published : 28 Jun 2021 04:18 PM
Last Updated : 28 Jun 2021 04:18 PM

ஓசூரில் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம்: எல்லையில் தொடரும் கட்டாய இ-பாஸ்

படங்கள்: ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து 50 சதவீதப் பயணிகளுடன் அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடங்கியுள்ளது. எனினும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயம் என்ற விதிமுறை தொடர்கிறது. இ- பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த மே 10-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு 50 நாட்களைக் கடந்த நிலையில், இன்று முதல் 23 மாவட்டங்களுக்கு இடையே 50 சதவீதப் பயணிகளுடன் அரசுப் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. தருமபுரி மண்டலத்தில் இருந்து 455 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 66 நகரப் பேருந்துகளும், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூர், தளி, சூளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஒரு வழித்தடத்தில் ஒரு பேருந்து என 33 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

எனினும் கரோனா எதிரொலியாக தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைகளும் மூடப்பட்டு இருப்பதால் ஓசூர் - பெங்களூரு இடையே இருமாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் தமிழக எல்லையான ஜுஜுவாடி வரை இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகளில் பயணித்து அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் வரை நடந்து சென்று, கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் அம்மாநில நகரப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

அதேபோல கர்நாடகா பேருந்துகளில் பயணித்து அத்திப்பள்ளியில் இறக்கி விடப்பட்டு தமிழகத்துக்குள் வரும் பயணிகள், அங்கிருந்து நடந்து வந்து ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக அரசு நகரப் பேருந்துகளில் பயணித்து ஓசூர் நகருக்கு வந்தடைகின்றனர்.

எல்லையில் தொடரும் இ-பாஸ் கட்டாயம்

எனினும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயம் என்ற விதிமுறை தொடர்கிறது. இ- பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு, ஓட்டுநர் உள்ளிட்டவர்களுக்கு உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஜுஜுவாடி இ-பாஸ் சோதனை மைய அலுவலர் கூறும்போது, ''நடப்பாண்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாக மே 10-ம் தேதி முதல் தமிழகத்துக்கு வரும் கர்நாடகா உள்ளிட்ட அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அன்று முதல் 24 மணி நேரமும் இ-பாஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இ-பாஸ் இல்லாத வெளிமாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை இங்கிருந்தே இ-பாஸுக்கு விண்ணப்பிக்க வைத்து, இ-பாஸ் கிடைத்ததும் தமிழகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x