Published : 28 Jun 2021 02:20 PM
Last Updated : 28 Jun 2021 02:20 PM

தடுப்பூசி ஒதுக்கீட்டை 75%லிருந்து 90% ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறும், மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீட்டை 25%லிருந்து 10% ஆகக் குறைத்து அரசு மருத்துவமனைகளுக்கான உள் ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்துமாறும் வலியுறுத்தி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க உடனடியாகத் தடுப்பூசிகள் எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும், 75%-25% என்கிற விகிதாச்சாரத்தை மாற்றி 90-10 என்கிற விகிதாச்சாரத்தில் அரசுக்குத் தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எழுதியுள்ள கடிதம்:

“மத்திய அமைச்சருக்கு வணக்கம். முதலில், கோவிட் தடுப்பூசிகளை மத்திய அரசே வாங்கி வழங்குவதற்கான எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்குவதற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த முடிவும், தடுப்பூசி மீதான மக்களின் தயக்கத்தை நீக்கி, தடுப்பூசி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய தமிழக அரசின் தொடர்ச்சியான முயற்சி காரணமாக, நடப்பு மாதத்தில் தமிழகத்தின் தினசரி தடுப்பூசி போடும் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துள்ளது.

தடுப்பூசிகள் கிடைப்பது கடந்த சில வாரங்களில், தடுப்பூசி போடும் இயக்கத்துக்கு முக்கியத் தடையாக உள்ளது. அவசியமான இந்தத் தடுப்பூசி ஆயிரம் மக்கள்தொகை கொண்ட அளவீட்டைப் பொறுத்தவரை, இதுவரை எங்களுக்கு ஒதுக்கப்பட்டவை நாட்டின் மாநிலங்களின் அளவை விட மிகக் குறைவான ஒன்றாக உள்ளது.

கடந்த காலங்களில் போதிய ஒதுக்கீட்டைச் சரிசெய்ய 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்குமாறு கோரி நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. ஜூன்-ஜூலை மாதங்களுக்கான ஒதுக்கீட்டின் அதிகரிப்பு மற்ற மாநிலங்களுக்குக் கிடைத்த அதிகரிப்புக்கு ஏற்பவே உள்ளது. மற்ற மாநிலங்கள் கடந்த காலங்களில் அதிக ஒதுக்கீடு பெற்றிருந்தனர். எனவே, ஏற்கெனவே அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே, அந்த முந்தைய கோரிக்கையை நான் தற்போது மீண்டும் வலியுறுத்துகிறேன். மேலும் இந்தப் பிரச்சினையில் தாங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசிக் கொள்கையின் கீழ், மத்திய அரசு 75% தடுப்பூசிகளை வாங்குகிறது. மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவை பணம் செலுத்தும் நபர்களுக்கு தடுப்பூசி போடப் பயன்படுகிறது. கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளின் ஒரு பகுதியை தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த 25% ஒதுக்கீடு அவர்கள் தடுப்பூசி செலுத்திய உண்மையான அளவீடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாக உள்ளது என்ற உண்மையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில், அரசுத் தரப்பில் 1.43 கோடி டோஸ்கள் முற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தனியார் மருத்துவமனைகள் 6.5 லட்சம் அளவை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. இது வெறும் 4.5% மட்டுமே. நடப்பு மாதத்தில் கூட, மாநிலத்தில் நிர்வகிக்கப்படும் 43.5 லட்சம் டோஸ்களில், தனியார் நிறுவனங்கள் 4.5 லட்சம் அளவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளன.

இது வெறும் 10% மட்டுமே. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையில் உள்ள பொருந்தாத தன்மை, தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 7-8 லட்சம் அளவைக் கொண்டிருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு மாத செயல்திறனுக்குச் சமம். அதே நேரத்தில் அரசுக்கு ஒதுக்கப்படும் வெறும் 2 லட்சம் டோஸ் என்பது அவற்றின் தற்போதைய ஒரு நாள் பயன்பாட்டை விடக் குறைவாக உள்ளது. கிடைக்கக்கூடிய அளவுகளை ஆய்வு செய்து மற்றும் சரியான செயல் திறன் அடிப்படையிலான விநியோகத்தால் மட்டுமே இதைச் சரிசெய்ய முடியும்.

தனியார் மருத்துவமனைகளுக்குத் தயாரிக்கப்படும் 25% தடுப்பூசிகளை ஒதுக்குவது உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதாக இருக்கலாம். ஒப்பீட்டளவில் சிறந்த விலையில் ஒரு பகுதியை விற்க அனுமதிப்பதன் மூலம் இது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றாலும், தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு கலப்பு விலை நிர்ணயம் தேவைப்படுவதால், நம் மக்களுக்கு அதிகபட்ச வேகத்தில் தடுப்பூசி போடுவதற்கான எங்கள் உடனடி இலக்கைக் குறைத்து மதிப்பிட நடவடிக்கை எடுக்க அனுமதிக்கக் கூடாது.

அரசு மருத்துவமனைகளுக்குத் தடுப்பூசிகளின் ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் இதை அடைய முடியும். அதே நேரத்தில், புதிய கொள்கையின் கீழ் கலப்பு விலை ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசின் கொள்முதல் விலை அதிகரித்து, தனியார் மருத்துவமனைகளுக்கான பங்கைக் குறைப்பதன் மூலம் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடியும்.

மேற்கூறிய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் உற்பத்திக்கான வாய்ப்புகளைக் குறுகிய காலத்தில் முடிந்தவரை சிறந்த பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்ய பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்:

* ஆயிரம் பேர் மக்கள்தொகைக்கு ஒதுக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில், இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவுகளை மதிப்பீடு செய்து, குறைந்த எண்ணிக்கையிலான அளவுகளை ஒதுக்கியுள்ள மாநிலங்களுக்குத் தேவையான அளவு தடுப்பூசி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* தற்போதைய 75:25 ஒதுக்கீட்டிற்கு எதிராக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான ஒதுக்கீட்டை 90:10 ஆக மாற்ற வேண்டும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x