Last Updated : 28 Jun, 2021 03:13 AM

 

Published : 28 Jun 2021 03:13 AM
Last Updated : 28 Jun 2021 03:13 AM

கரோனா ஊரடங்கு நேரத்திலும் வேலைவாய்ப்பு தந்த கரிமூட்டத் தொழில்: மானாமதுரை ரயில்வேக்கு ரூ.1.50 கோடி வருவாய்

மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளில் கரிமூட்டத் தொழில் கரோனா ஊரடங்கு நேரத்தில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு தந்ததோடு, ரயில்வேக்கு ரூ.1.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கரிமூட்டத் தொழில் அதிகளவில் நடந்து வருகிறது. மாவட்டத்தில் மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பல ஆண்டுகளாக கரிமூட்டத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீமைக் கருவேல மரங்களை வெட்டி தரம் வாரியாக பிரித்து களி மண்ணால் மூடி தீ வைக்கின்றனர். ஒரு வாரம் கழித்து தண்ணீரை ஊற்றி மூட்டத்தை அணைத்து கரியை பிரித்தெடுக்கின்றனர். அவற்றை தூள்கரி, தூர்கரி, உருட்டு கரி, குச்சி கரி, மண் கரி என 5 வகைகளாகத் தரம் பிரிக்கின்றனர். தரத்துக்கு ஏற்ப ஊதுபத்தி, கொசுவர்த்தி தயாரிக்கவும், ஓட்டல், மின் உற்பத்தி நிலையங்கள், சிமென்ட் ஆலைகள், பட்டறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. கரோனா ஊரடங்கால் பலர் வேலைவாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கினர். அதே நேரம் கரிக்கு தேவை இருந்ததால், மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளில் கரிமூட்டத் தொழில் தொடர்ந்து நடந்தது. இதனால் பலர் வேலைவாய்ப்பு பெற்றனர்.

இங்கு கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் டன் கரி மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து மேற்குவங்கம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.1.50 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது.

மானாமதுரையைச் சேர்ந்த மனோஜ்குமார் கூறியதாவது: மானாமதுரை பகுதிகளில் கிடைக்கும் கரியில் கார்பன் அளவு அதிகமாக இருப்பதால், வெளிமாநிலங்களில் கிராக்கி உள்ளது. ஒருடன் கரி தரத்துக்கு ஏற்ப ரூ.13 ஆயிரம் - ரூ.15 ஆயிரம் வரை விற்பனையாகிறது என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x