Last Updated : 27 Jun, 2021 05:05 PM

 

Published : 27 Jun 2021 05:05 PM
Last Updated : 27 Jun 2021 05:05 PM

வேலூரில் இருந்து சென்னை உட்பட 27 மாவட்டங்களுக்கு நாளை முதல் பேருந்து சேவை: தயார் நிலையில் பேருந்து நிலையங்கள்

வேலூர் பழைய பேருந்து நிலையத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்

வேலூர்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து நாளை முதல் 455 அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் கோட்டத்துக்கு உள்பட்ட வேலூர் மண்டலத்தில் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்) ரங்காபுரம், கொணவட்டம், கிருஷ்ணா நகர், ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், பேர்ணாம்பட்டு ஆகிய 10 இடங்களில் அரசு போக்குவரத்து பணிமனைகள் மூலம் மொத்தம் 245 நகரப் பேருந்துகள், 384 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 629 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கரோனா 2-வது அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழமையாக நிறுத்தப்பட்டன.

கடந்த 48 நாட்களுக்கு மேலாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அரசு போக்குவரத்துக் கழக வேலூர் மண்டலத்துக்கும் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா பரவல் தமிழகத்தில் குறையாத கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்து சேவை ஜூன் 28-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் வேலூர் உட்பட 27 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதைதொடர்ந்து, ஜூன் 28-ம் தேதி (நாளை) திங்கள்கிழமை அதிகாலை முதல் அரசு பேருந்துகள் இயக்குவதற்கு பேருந்துகளும், பேருந்து நிலையங்களும் தயார் நிலையில் இருப்பதாக வேலூர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

”தமிழக அரசு உத்தரவுபேரில், கரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங்களுக்கு வேலூரில் இருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூரில் உள்ள அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகளில் தூய்மைப்பணி, ஆயில் சர்வீஸ் உள்ளிட்ட பணிகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர, போக்குவரத்து ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என அனைவரும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என சுற்றரிக்கை ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து அரசு தடை விதித்துள்ள சேலம், கோவை, தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப் படாது.

இது தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். தென் மாவட்டங்களாக திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வேலூர் மண்டலத்தில் இருந்து முதல் கட்டமாக 227 நகர பேருந்துகளும், 228 புறநகர் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் ஆதரவு பொருத்து தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளும் நாளை அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசுப்பேருந்தில் 50 சதவீதம் பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போக்குவரத்துக்கழகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பேருந்துகள் சென்ற உடன் கிருமி நாசினி கொண்டு பேருந்துகளை தூய்மை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஜூன் 28-ம் தேதி (நாளை) முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் வேலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் தூய்மைப்பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் இன்று மேற்கொண்டனர்.

அதேபோல், ஜூலை 1-ம் தேதி முதல் தனியார் பேருந்துகளை இயக்கவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x