27 மாவட்டங்களில் நாளை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

27 மாவட்டங்களில் நாளை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
Updated on
1 min read

கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா ஊரடங்கை மேலும் பல தளர்வுகளுடன்ஜூலை 5-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதில் வகை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர்,விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொது பேருந்து போக்குவரத்தை, கரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்.

ஏற்கெனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 28) முதல் பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் உள்ள19,290 பேருந்துகளில் 9,333 பேருந்துகள் இயக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதல் பேருந்து இயக்கப்படும். பேருந்துகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in