Last Updated : 26 Jun, 2021 09:25 PM

 

Published : 26 Jun 2021 09:25 PM
Last Updated : 26 Jun 2021 09:25 PM

மக்கள் சேவைக்காக சீரமைக்கப்பட்ட புதுச்சேரி ஆளுநர் அலுவலகம்: பல ஆண்டுகளாக பணியாற்றிய 3 அதிகாரிகள் மாற்றம்

புதுச்சேரி

மக்கள் சேவைக்காக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் சீரமைக்கப்பட்டுள்ளது. அங்கு பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த 3 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, மக்கள் சேவைக்காக எளிமைப்படுத்தப்பட்டு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த ஆஷா குப்தா, செய்தி தொடர்பாளராக பணியாற்றிய குமரன், குறைகேட்கும் அதிகாரியாக பணியாற்றிய காவல்துறை அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக ஆளுநர் மாளிகை மேற்பார்வையாளராக சந்திரபோஸ், செய்தி தொடர்பு அதிகாரியாக குணசேகரன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல சிக்கன நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு நிர்வாகம் சீரமைக்கப்பட்டுள்ளது. செலவினங்கள் கண்காணிக்கப்பட்டு அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செலவிடும் முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேற்பார்வையாளர்கள் ரூ.3 ஆயிரத்துக்கும் மேல் என்ன செலவு செய்ய திட்டமிட்டாலும் அது ஆளுநரின் தனிச்செயலாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதைப்போல துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு பொருட்கள் எடுப்பதாக இருந்தாலும், ஒப்பந்த அடிப்படையில் பொருட்கள் எடுப்பதாக இருந்தாலும்,

ஒப்பந்த அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தாலும், அதன் செலவு கணக்குகள் முன்னதாகவே சமர்ப்பிக்கப்பட்டு கட்டாயம் ஒப்புதல் பெறப்பட வேண்டும். புதிதாக எந்த பொருள் வாங்கினாலும் குறைந்த செலவில் ஒப்பீடு அடிப்படையில் முன் அனுமதி பெற்று வாங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களிடமிருந்து பெறப்படும் மற்றும் வரும் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x