Published : 26 Jun 2021 08:19 PM
Last Updated : 26 Jun 2021 08:19 PM

ராமதாஸ், அன்புமணி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரும் மனு: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னிய இளைஞர் பெருவிழா பொதுக்கூட்டத்தை அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நடத்திய ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவிற்கு பதில் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னிய இளைஞர் பெருவிழா பொதுக்கூட்டத்தை அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நடத்தியதாக, மாமல்லபுரம் காவல் நிலையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகிய நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுவில், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என பாமக தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து நால்வருக்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

மேலும், மனு தொடர்பாக மாமல்லபுரம் டி.எஸ்.பி., காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x