Published : 26 Jun 2021 08:08 PM
Last Updated : 26 Jun 2021 08:08 PM

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் எலும்பு முறிவுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றத்தில் தாயார் வழக்கு

சென்னை

சென்னையைச் சேர்ந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு போலீஸ் காவலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், உரிய சிகிச்சை அளிக்கக் கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை அளித்த பதிலை அடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

வடசென்னையின் பிரபல ரவுடி, காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த காக்கா தோப்பு பாலாஜியை ஜூன் 12ஆம் தேதி விழுப்புரம் அருகே போலீஸார் பிடித்துக் கைது செய்தனர்.

போலீஸார் கைது செய்தபோது காக்கா தோப்பு பாலாஜி காவல்துறையினரைத் தாக்கி தப்பிக்க நினைத்து குதித்தபோது அவரின் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பாலாஜியைக் கைது செய்த போலீஸார் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக ஜூன் 13ஆம் தேதி அனுமதித்தனர்.

இந்நிலையில் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும், எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் அவரது தாய் கண்மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் காக்கா தோப்பு பாலாஜியின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாலாஜிக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனவும், உடலில் ஏற்பட்ட காயங்களுக்கவும், கரோனா தொற்று சிகிச்சைக்காகவும் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும், பின்னர் ஜூன் 23ஆம் தேதி மருத்துவ சிகிச்சை முடிந்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது பாலாஜி உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பாலாஜிக்கு எலும்பு முறிவு இல்லை என்பதால் அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x