Published : 26 Jun 2021 12:53 PM
Last Updated : 26 Jun 2021 12:53 PM

20% இட ஒதுக்கீடு கோரி போராட்டம்; பாமக, வன்னியர் சங்கத்தினர் 35,554 பேர் மீது வழக்குப் பதிவு: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி பதில்

சென்னை

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டங்களில் ஈடுபட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 35,554 பேர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னிய குல சத்திரியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி, வன்னியர் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பெருங்களத்தூரில் நடைபெற்ற ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதால், பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தமிழக டிஜிபி சார்பில் ஏஐஜி அர.அருளரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விதிகளை மீறி ஒன்றுகூடுவது, ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது எனத் தலைமைச் செயலாளர் பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து மாவட்ட எஸ்.பி.களும், மாநகரங்களின் காவல் ஆணையர்களும் நடவடிக்கை எடுத்தனர்.

போராட்டங்களில் ஈடுபட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 35 ஆயிரத்து 554 பேர் மீது தமிழகம் முழுவதும் 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, மாவட்ட மற்றும் மாநகர வாரியான விவரங்களும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை டிஜிபி எடுத்து வருதால், வாராகி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாவைத் தற்காலிக ஏற்பாடாக தமிழக அரசு கொண்டுவந்தபின், பாமக, வன்னியர் சங்கம் ஆகியவை போராட்டங்களை நிறுத்தியுள்ளன” என பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x