

சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் பணம் செலுத்தும் இயந்திரங்களில் நூதன முறையில் நடை பெற்ற திருட்டு அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நூதன மோசடியின் மூலம், பல லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தையடுத்து எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்தலாமா, இதனால் தங்களின் பணத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் வாடிக்கையாளர்களிடையே எழுந்தன.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பான பணம் செலுத்தும் இயந்திரங்களில்தான் இந்த நூதன திருட்டு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, உடனடியாக அந்த இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய திருட்டு களைத் தடுக்க, இந்த இயந்திரங்களில் என்னென்ன பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வரப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் பொதுமக்களின் பணம் திருடப்படவில்லை. மாறாக, வங்கியின் பணம்தான் திருடப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக உள்ளது.இவ்வாறு வங்கி அதிகாரிகள் கூறினர்