Published : 25 Jun 2021 07:31 PM
Last Updated : 25 Jun 2021 07:31 PM

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி; ஷாப்பிங் மால்கள் திறக்கலாம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?- முழு விவரம்

சென்னை

ஊரடங்கு நீட்டிப்பில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதல் தளர்வாக வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்றுப் பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், ஏற்கெனவே மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 2 - (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3 - (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்

வகை 3-ல் உள்ள மாவட்டங்களில் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்) ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* அனைத்து தனியார் நிறுவனங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்துத் துணிக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து நகைக் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும். திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

* கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

* காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விளையாட்டுப் பயிற்சிக் குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

வகை - 2 மற்றும் 3-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்.

* மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

* அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் அதன் செயல்பாடுகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 50 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50% நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாகச் செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும்.

* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவை தவிர பொதுவான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x