Published : 25 Jun 2021 07:22 PM
Last Updated : 25 Jun 2021 07:22 PM

கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

தமிழ்நாட்டில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''கரோனா பெருந்தொற்று மத்திய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்றுப் பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.

வகை 2 - (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3 - (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 1-ல் உள்ள மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை நேரத் தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக பின்வரும் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகிறது.

· தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

· மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

· கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· அனைத்துத் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் அதன் செயல்பாடுகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

· இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 33 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.

· அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· காலை 6.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.

· பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும்.

· அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள்

காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

· இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

· இ-சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும்.

· மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும், உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

· இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.

· திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும்.

· திறந்த வெளியில், திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 நபர்கள் மட்டும் கரோனா RTPCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்படும்.

· திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்புப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x