Published : 25 Jun 2021 04:58 PM
Last Updated : 25 Jun 2021 04:58 PM

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு தள்ளுபடி: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை

திருமண ஆசை காட்டி நடிகையை ஏமாற்றிய புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படுவோம் என அஞ்சி மணிகண்டன் தலைமறைவானார். அவரை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 16ஆம் தேதி தள்ளுபடி செய்ததது.

இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனைத் தனிப்படை போலீஸார் கடந்த 20ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி செல்வகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மணிகண்டன் தரப்பில் நடிகையைக் காயப்படுத்தியதாகக் கூறுவதற்கும், தன்னுடன் பழகிய சில நாட்களிலேயே கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றும், ஆரம்பக்கட்ட விசாரணையை முழுமையாக முடிக்காமலும், தன்னிடம் விளக்கம் பெறாமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கர், காவல்துறையின் அறிக்கையைத் தாக்கல் செய்தார். மேலும், தன்னை விட்டுப் போகக் கூடாது என நடிகைக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்தது, தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணிலிருந்து நடிகைக்கு போட்டோக்கள் அனுப்பியது, இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்தது ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மணிகண்டனைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் வாதிட்டார்.

அதேபோல புகார்தாரரான நடிகை தரப்பில், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸ் தரப்பு, நடிகை தரப்பு ஆட்சேப வாதங்களை ஏற்றுக்கொண்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x