Published : 25 Jun 2021 04:44 PM
Last Updated : 25 Jun 2021 04:44 PM

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளருக்கு முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

நடிகை புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதான நிலையில், வழக்கு சம்பந்தப்பட்ட மணிகண்டனின் உதவியாளர் பரணிதரனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியும், கட்டாயக் கருக்கலைப்பு செய்தும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மணிகண்டனின் உதவியாளர் பரணிதரன் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் பரணிதரன் தாக்கல் செய்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பரணிதரன் தரப்பில், சமரசத்துடன் செல்லும்படி மணிகண்டன் தரப்பிலிருந்து நடிகையின் தந்தையிடம் பேசியதற்காகத் தன் மீது மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், நடிகையை அறிமுகம் செய்ததைத் தவிர வேறு ஏதும் தான் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், மணிகண்டன் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதால் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மணிகண்டனிடம் நடிகையை அறிமுகம் மட்டுமே செய்த பரணிதரன் மீது வேறு குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதால் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x