Published : 25 Jun 2021 04:26 PM
Last Updated : 25 Jun 2021 04:26 PM

2 டிஜி கரோனா எதிர்ப்பு மருந்து; 40 நிறுவனங்கள் தயாரிக்க முன்வந்துள்ளன: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள 2 டிஜி கரோனா மருந்தை உற்பத்தி செய்ய 40 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட பவுடர் வடிவிலான கரோனா மருந்தான 2-டிஜி, அனைத்து உருமாறிய வகை கரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன்மிக்கதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்தது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து, டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய கரோனாவிற்கான மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் அவசர காலப் பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, கடந்த மாதம் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது. பவுடர் வடிவிலான இந்த மருந்தைத் தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம் எனவும், இதனால் கரோனா நோயாளிகள் மருத்துவ ஆக்சிஜனைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடிவதாகவும், நோயாளிகள் விரைவில் குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மருந்தைச் சந்தைக்குக் கொண்டுவரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அனைத்து சோதனைகளும் முடிவடைந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளது. இதை மத்திய அமைச்சர், கடந்த மே மாதமே, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார். தினந்தோறும் கரோனா மரணங்கள் நிகழ்ந்து வருவதால் இந்த மருந்தை விரைந்து விற்பனைக்குக் கொண்டுவர உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த மருந்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தபோதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கிறேன்” என வாதிட்டார்.

இதையடுத்து, கரோனா தொற்றை குணப்படுத்த உலக நாடுகளின் விஞ்ஞானிகள், மருந்து கண்டுபிடிக்க முயன்றுவரும் நிலையில், தற்போது கண்டுபிடித்துள்ள மருந்தை, பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்ய அனுமதியளித்து, விற்பனைக்குக் கொண்டுவந்தால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மனு குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “டி.ஆர்.டி.ஓ. எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களைக் கேட்டுள்ளோம், 40 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது”. எனத் தெரிவித்தார்.

இந்த மருந்து எப்போது சந்தைக்கு வரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, இதுகுறித்த விவரங்களை வழங்குவதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 2 டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவர் இரு நாட்களில் குணமடைந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கரோனா குணப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி, அவரை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் அழைத்துப் பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், சர்வதேச மருந்து மாஃபியாக்கள் காரணமாக இந்த மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார் என்றும் தெரிவித்தனர்.

ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

இதையடுத்து 2 டிஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x