Published : 25 Jun 2021 12:17 PM
Last Updated : 25 Jun 2021 12:17 PM

ஊரடங்கில் தளர்வு அதிகரிப்பு?- மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனையைத் தொடங்கினார். தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். இதில் மேலும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் அலை ஓய்ந்த நிலையில் ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்தில் இயல்பு வாழ்க்கை சாதாரணமாகச் சென்றது. தடுப்பூசிகள் போடப்படாத நிலையில் அலட்சியமாக இருந்தால் இரண்டாம் அலைப் பரவல் வரும் என நிபுணர்கள் எச்சரித்தனர்.

நிபுணர்கள் எச்சரித்தபடி இரண்டாம் அலைப் பரவல் விரைவாக வந்தது. மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் ஆரம்பித்த இரண்டாம் அலைப் பரவல், ஏப்ரல் மாதத்தில் அதிகரித்து, மே மாதத்தில் உச்சம் தொட்டது. தமிழகத்திலும் அதன் பரவல் அதிகரித்து உச்சம் தொட்டது. ஒரு நாளைக்கு 36,000 தொற்று எண்ணிக்கை என உச்சம் தொட்டது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஊரடங்கை அமல்படுத்தி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டது. பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க நிவாரண நிதி, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்தது. பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறைந்ததால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

நேற்று தமிழகத்தில் மொத்த பாதிப்பு 6500-க்கும் கீழே 6,162 என்கிற எண்ணிக்கையிலும், சென்னை பாதிப்பு 500-க்கும் கீழே 372 என்கிற எண்ணிக்கையிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 49,845 ஆகக் குறைந்துள்ளது. தினசரி குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுபோன்ற முன்னேற்றங்களை அடுத்து ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 7 நாட்களுக்கு ஒருமுறை ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தளர்வுகள், கட்டுப்பாடுகளை அறிவிக்கிறார்.

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அமலான ஊரடங்கு வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். கடந்த ஊரடங்கு நீட்டிப்பில் மாவட்டங்கள் 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தொற்று குறையாத 11 மாவட்டங்களில் அதே தளர்வு இல்லா ஊரடங்கு தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று வெகுவாகக் குறைந்ததால் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இ-பதிவிலும் தளர்வு அளிக்கப்பட்டது. தற்போது அரசின் நடவடிக்கை காரணமாக தொற்று வெகுவாகக் குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளிக்கலாம் எனத் தெரிகிறது. அதே நேரம் மூன்றாம் அலைப் பரவல், டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

முதல் கட்டமாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார். அடுத்து தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர், பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர், காவல்துறை தலைமை அதிகாரி, சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துவார்.

இந்த ஆலோசனையில் 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாமா? தளர்வுகளை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கலாமா? திருமணம், துக்க நிகழ்வுகள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் தளர்வுகளை மேலும் அதிகரிக்கலாமா என்பது குறித்தும் ஆராயப்படும்.

மீண்டும் தளர்வுகள் அதிகரித்து, தடுப்பூசி போதிய எண்ணிக்கையில் போடப்படாத நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேநேரம் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கணக்கில் எடுக்கும் நிலை அரசுக்கு உள்ளது.

டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அறிகுறியுடன் ஒருவர் சென்னையில் கண்டறியப்பட்டது, 25 ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது உள்ளிட்ட நடைமுறை நிகழ்வுகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x