Published : 25 Jun 2021 03:11 AM
Last Updated : 25 Jun 2021 03:11 AM
மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை மேம்படுத்த, கட்சி நிர்வாகிகள் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் கமல்ஹாசனிடம் அளிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம், நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில்சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவர், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர். மேலும்,நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். இதுவரை புதிதாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.
குழு அமைப்பு
இந்நிலையில், கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை தயாரிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மூலம் பரிந்துரைகளை தயாரிக்கும் பணிகள் கடந்தசில வாரங்களாக நடைபெற்று வந்தன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், மக்கள் நீதிமையத்தின் தலைவர் கமல்ஹாசனிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தொடர் ஆலோசனை
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவினர், கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்த காலியாக உள்ள முக்கிய பொறுப்புகளில் நிர்வாகிகளை நியமிப்பது, கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் சந்தித்து உரையாடுவது, மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பரிந்துரைகளை அளித்துள்ளனர்.
இந்த பரிந்துரைகள் தொடர்பாககட்சியின் தலைவர் கமல்ஹாசன் இறுதி முடிவுகளை எடுத்து விரைவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT