

கவியரசு கண்ணதாசனின் 95-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது படத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கவியரசு கண்ணதாசனின் பிறந்த தினமான ஜூன் 24-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள கண்ணதாசனின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், கவியரசு கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.