Last Updated : 24 Jun, 2021 09:09 PM

 

Published : 24 Jun 2021 09:09 PM
Last Updated : 24 Jun 2021 09:09 PM

குறைந்த கரோனா இறப்பு விகிதம்; தமிழகத்தில் 4-வது இடத்தில் சிவகங்கை அரசு மருத்துவமனை: டீன் தகவல்

சிவகங்கை

‘‘தமிழகத்தில் குறைந்த கரோனா இறப்பு விகிதத்தில் 4-வது இடத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது,’’ என சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் ரேவதி தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 380 ஆக்சிஜன் படுக்கைகளுடன் மொத்தம் 800 படுக்கைகள் உள்ளன. இங்கு கரோனா முதல் அலையில் இருந்து தற்போது வரை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,107 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 7,911 பேர் குணமடைந்தனர். 124 பேர் உயிரிழந்தனர். இதில் 34 பேர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர்.

தமிழகத்தில் குறைந்த கரோனா இறப்பு விகிதத்தில் 4-வது இடத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. சிறந்த சிகிக்சையால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலர் இங்கு சிகிச்சைகாக வந்தனர். மேலும் கர்ப்பிணிகளுக்காக 45 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு உள்ளது. இதில் கரோனா பாதித்த 762 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்தனர். கரோனா பாதித்த 353 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

மேலும் குழந்தைகள் பிறந்ததும் 5 முதல் 7 நாட்கள் வரை தனிப்படுத்தி மருத்துவக் குழு மூலம் கண்காணித்தோம். 12 பிறந்த பச்சிளங்குழந்தைகள் உட்பட கரோனா பாதித்த 139 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தோம்.

கரோனா பாதித்த கர்ப்பிணிகள், குழந்தைகளில் ஒருவர் கூட இறக்கவில்லை. தற்போது கரோனா பாதித்து குணமடைந்தவர்களில் நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க 40 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்காக புறநோயாளிகள் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 11,446 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, என்றார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் ரபீக், உதவி அலுவலர் மிதூன், துறைத்தலைவர்கள் காயத்ரி (மகப்பேறு), குணா (குழந்தைகள் நலம்), பீர்முகமது (பொதுமருத்துவம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x