Published : 24 Jun 2021 03:44 PM
Last Updated : 24 Jun 2021 03:44 PM

அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள்; திமுக யாராலும் அடக்க முடியாத யானை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை

அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை. நான்கு கால்கள்தான் யானையினுடைய பலம். ‘சமூக நீதி, சுயமரியாதை, மொழி- இனப்பற்று, மாநில உரிமை’ ஆகிய நான்கின் பலத்தில்தான் திமுகவும் நிற்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது:

“ஐம்பது நாட்களுக்குள் செய்திருக்கக்கூடிய மிக முக்கியமான சாதனைகளில் சிலவற்றைத்தான் நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன். இவற்றை எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் மக்களுக்கு நிச்சயமாக நன்கு தெரியும்.

ஆளுநர் உரை குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். இந்த அறிக்கையில் மணியோசையும் இல்லை. யானையும் இல்லை” என்று சொன்னார்கள். யானை என்று சொன்னதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்கு கால்கள்தான் யானையினுடைய பலம். ‘சமூக நீதி, சுயமரியாதை, மொழி-இனப்பற்று, மாநில உரிமை’ ஆகிய நான்கின் பலத்தில்தான் திமுகவும் நிற்கிறது; இந்த அரசும் நிற்கிறது. இந்த ஆளுநர் உரையைப் படிப்பவர் கண்களுக்குச் சமூக நீதியும், சுயமரியாதையும், தமிழுக்கும், தமிழர்க்கும் நாங்கள் செய்ய இருக்கும் நன்மைகளும், மாநில உரிமைகளுக்கான எங்களது முழக்கங்களும் நிச்சயம் தெரியும்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x