

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை வரும் 27-ம் தேதி பொறுப்பேற்கவுள்ளதாக, சட்டப்பேரவை தலைவர் செல்வம் கூறியுள்ளார்.
காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் இன்று நடைபெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா அமுது படையல் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரி அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழா 27-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் புதுச்சேரி மக்களுக்கான அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தப்படும். புதுச்சேரியில் 5 ஆண்டு காலம் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பான வகையில் ஆட்சி செய்யும். காரைக்காலில் கண்டிப்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஒரு முறை நடத்தப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு என்னென்னெ விதிமுறைகள் உள்ளனவோ அவற்றை முழுமையாக பயன்படுத்தி செயல்படுவேன். புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை வளாகம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 16 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் திறப்பு விழா நடத்தப்படும் என்றார்.
முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக காரைக்கால் வந்த செல்வத்தை மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் ஆகியோர் வரவேற்றனர்