Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தும் 2-ம் தவணை தடுப்பூசியை 8.30 லட்சம் பேர் போடவில்லை: தமிழக சுகாதாரத் துறை தகவல்

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த 8.30 லட்சம் பேர், இன்னும் 2-ம் தவணை தடுப்பூசி போடவில்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாகபொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை போட்டவர்களுக்கு 4 வாரம் இடைவெளியில் 2-வது தவணையும், கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது தவணை 12 வாரம் இடைவெளியிலும் போடப்படுகிறது. இதற்கிடையே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களில் பலருக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சிலருக்கு கரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள்2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களில் குறிப்பிட்ட கால இடைவெளி முடிந்த 5 லட்சத்து 69,572 லட்சம் பேரும், முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 2 லட்சத்து 60,600பேரும் என மொத்தம் 8 லட்சத்து 30,172 பேர் 2-ம் தவணை தடுப்பூசிபோடாமல் உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொண்டு தடுப்பூசி போடாததற்கான காரணம் கேட்கப்படுகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். 3-வதுஅலை தொற்றையும் கட்டுப்படுத்த முடியும். அதனால், முதல் தவணைதடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தாங்களாகவே முன்வந்து 2-ம் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x