Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM

கோவையை புறக்கணிக்கவில்லை: பேரவையில் முதல்வர் விளக்கம்

திமுக வெற்றி பெறவில்லை என்பதற்காக, கோவை மாவட்டத்தை எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய, பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “அனைவருக்குமான அரசு என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும், அதிக வருமானத்தை ஈட்டித் தரும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. அங்கு அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால், கோவையை திமுக புறக்கணிக்கிறதா?” என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், “கோவையை எந்தெந்த வகைகளில் இந்த அரசு புறக்கணிக்கிறது என்று சொன்னால், அதற்கு பதில் அளிக்கலாம். `வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவுக்கும், வாக்களிக்காதவர்கள் திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கும்' என்று தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே தெரிவித்தேன்.

இன்னும் சொல்லப்போனால், வாக்களிக்காத மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுக்குத்தான் அதிகம் செய்வோம். அப்படித்தான் இந்த அரசின் செயல்பாடுகள் இருக்கும். கோவையை திமுக அரசு புறக்கணிக்கவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x