Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM

வருமானவரித் துறை அதிகாரியிடம் ரூ.20 ஆயிரம் நூதன மோசடி: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீஸார் அறிவுரை

சென்னை

வருமானவரித் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றும் அதிகாரி ஒருவர் சென்னை மந்தைவெளியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி ஆன்லைன் வர்த்தக தளமான `ஸ்நாப் டீலில்' சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

வீட்டுக்கு வந்த அந்தப் பொருட்களின் தரம் சரியாக இல்லை என்பதால், அவற்றை திருப்பி அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து 6352625717 என்ற எண்ணில் இருந்து அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர், பொருட்களுக்கான பணத்தை திருப்பி தருவது சம்பந்தமாக quick service என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.

அதன்படி அந்த செயலியை பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு தவணையாக தலா ரூ.9,999 வீதம் மொத்தம் ரூ.19,998 எடுத்து விட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வருமானவரித் துறை அதிகாரி, அந்த செயலியை உடனே நீக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த செயலியை நீக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனக்கு போன் செய்த எண்ணைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஸ்நாப் டீலில் அதிகாரி பொருட்களை வாங்கியது, அதை அவர் திருப்பி அனுப்பியது குறித்து பணம் பறிக்கும் கும்பலுக்கு எப்படித் தெரிந்தது? இதில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடிபி வழங்கக்கூடாது

தேவையற்ற செயலிகளை, அதிலும் கூகுள் ப்ளே ஸ்டோர் தவிர, மற்றவை மூலம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்தால், அதன் மூலம் நமது தகவல்கள் திருடப்பட்டு, பணம் திருடவும், பறிக்கவும் வாய்ப்புள்ளது. ஆகவே, செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வகையில் பாஸ்வேர்ட், யூசர் ஐடி, ஓடிபி போன்றவற்றை பிறருக்கு வழங்கக் கூடாது என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x