Published : 23 Jun 2021 07:44 PM
Last Updated : 23 Jun 2021 07:44 PM

தகவல் தொழில்நுட்பச் சட்ட புதிய விதி; நடவடிக்கை கடுமையாக இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம்: உயர் நீதிமன்றம்

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் புதிய விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்துவந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐக் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவந்தது.

இந்த விதிகளைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி சுய ஒழுங்குமுறை நடைமுறை இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளைச் சம்பந்தப்பட்ட பப்ளிஷரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது.

செய்திகளை முடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுகுறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

அதேசமயம், இந்த விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மனுதாரர் சங்கம், இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே இந்தப் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x