Published : 23 Jun 2021 05:48 PM
Last Updated : 23 Jun 2021 05:48 PM

அனைவருக்கும் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை கிடைப்பதை உறுதி செய்க: ஓபிஎஸ்

அனைவருக்கும் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை:

"திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, கரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் தவணை ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது தவணையும், அதனுடன் 14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், பல மாவட்டங்களில் நிவாரண நிதி மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், மளிகைத் தொகுப்பு கொடுக்கப்படுவதில்லை என்றும் செய்திகள் வருகின்றன. சில இடங்களில், மளிகைத் தொகுப்பில் குறைவான பொருட்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான மாவட்டங்களில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மளிகைத் தொகுப்புப் பைகள் நியாய விலைக் கடைகளுக்குச் செல்வதில்லை என்று கூறப்படுகிறது.

சில நியாய விலைக் கடைகளில் மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக நாள் மற்றும் நேரம் குறித்து டோக்கன்கள் வழங்கப்பட்டாலும், உரிய நேரத்தில் மளிகைப் பொருட்கள் வராததால், மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகையை வழங்க முடியாமல் நியாய விலைக் கடை ஊழியர்கள் தவிக்கின்றனர்.

சில நியாய விலைக் கடைகளில், டோக்கன்களை வாங்கிக்கொண்டு சிலருக்கு நிவாரணத் தொகை மட்டும் வழங்கப்படுகிறது. இதனால், இவர்களுக்கு மளிகைத் தொகுப்பு என்பது கேள்விக்குறியாகிறது. அதே சமயத்தில், சிலருக்கு மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மளிகைத் தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் கேட்கும்போது, சில சமயங்களில் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தெரியவருகிறது.

மொத்தத்தில், பல இடங்களில், குறிப்பாக, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அரசின் மளிகைப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் பரிதவிப்பதாகத் தகவல்கள் வருகின்றன. நிவாரணத் தொகை வழங்கும்போது, கூடவே மளிகைத் தொகுப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, அனைவருக்கும் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை கிடைக்கவும், ஏற்கெனவே நிவாரணத் தொகை மட்டும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மளிகைத் தொகுப்பு வழங்குவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x