Last Updated : 23 Jun, 2021 05:36 PM

 

Published : 23 Jun 2021 05:36 PM
Last Updated : 23 Jun 2021 05:36 PM

கரோனா; தந்தை உயிரிழந்ததால் குடும்ப பாரத்தைச் சுமக்கும் 8-ம் வகுப்பு மாணவர்: சிதைந்துபோன கல்வி

ஜெயசீலன் மகன் யஸ்வந்த் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் | படம்.வி.எம்.மணிநாதன்

வேலூர்

கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற தந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதால் 8-ம் வகுப்புப் படித்துவரும் அவரது மகன் குடும்ப பாரத்தைச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மாணவர் மேற்கொண்டு கல்வி பயில தமிழக அரசோ அல்லது தொண்டு நிறுவனத்தினரோ உதவி செய்ய முன்வர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பலவன்சாத்து குப்பம், ஒற்றை வாடை தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ஜெயசீலன் (57). இவரது மனைவி இந்திரா (50). இவர்களுக்கு ஜனனி (15) என்ற மகளும், யஸ்வந்த் (13) என்ற மகனும் உள்ளனர். மாற்றுத்திறனாளியான ஜெயசீலன் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பாகக் காய்கறிக் கடை நடத்தி வந்தார். இதில், கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தன் தாய், மனைவி, மகள் மற்றும் மகனைப் பராமரித்து வந்தார். வேலூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஜனனி 10-ம் வகுப்பும், யஸ்வந்த் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 11-ம் தேதி கரோனா அறிகுறிகளுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயசீலன் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்த மருத்துவமனை நிர்வாகம் ஜெகதீசனுக்கு கரோனா நெகட்டிவ் எனத் தெரிவித்து அவரது உடலைக் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க முன்வந்தனர்.

ஆனால், ஜெயசீலனின் மனைவி இந்திரா, இறுதிச் சடங்கு செய்ய எங்களிடம் வசதியில்லை, ஆட்களும் இல்லை எனக்கூறியதால் மருத்துவமனை நிர்வாகமே ஜெயசீலனின் உடலை நல்லடக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஜெயசீலன் உயிரிழந்த சில நாட்களில் அவரது தாயாரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்ததால் ஜெயசீலனின் மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

குடும்பத்தை இத்தனை ஆண்டு காலம் சுமந்த ஜெயசீலன் உயிரிழந்ததால், அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. தனக்குப் போதிய வியாபாரத் திறமை இல்லாததால் தன்னால் காய்கறிக் கடையை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டதாக ஜெயசீலன் மனைவி, தன் மகள் மற்றும் மகனிடம் கூறி அழுதார்.

இதைக் கேட்டதும் வேதனையின் உச்சத்துக்குச் சென்ற 8-ம் வகுப்புப் படித்துவந்த யஸ்வந்த், தன் தந்தை செய்துவந்த காய்கறி வியாபாரத்தைத் தான் செய்வதாக குடும்பத்தாரிடம் தெரிவித்தார். ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த தாய் இந்திரா, வேறு வழியின்றித் தன் மகனைக் காய்கறி வியாபாரத்துக்கு அனுப்பினார்.

அதன்படி, கடந்த சில நாட்களாக டோல்கேட் உழவர் சந்தைக்கு எதிரேயுள்ள காய்கறிக் கடைக்கு தினமும் அதிகாலை 3 மணிக்கு வரும் யஸ்வந்த், தன் கடைக்குத் தேவையான காய்கறிகளைத் தானே வாங்கி வந்து அதைக்கொண்டு சில்லறை வியாபாரம் செய்து வருகிறார்.

தந்தை உயிரிழந்ததாலும், தாயார் மற்றும் சகோதரியைக் காப்பாற்ற வேண்டும் என்பதாலும் தன் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் சிறுவயதிலேயே யஸ்வந்த் காய்கறி வியாபாரத்துக்குத் தள்ளப்பட்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாணவர் யஸ்வந்த் கூறும்போது, ''என் அக்கா கல்லூரி வரை சென்று படிக்க வேண்டும். நான் பொறியாளராக வரவேண்டும் என்பதே என் தந்தையின் கனவு. அவரது விருப்பப்படியே நானும், என் அக்காவும் படித்துவந்தோம். இந்நிலையில் என் தந்தை, பாட்டி என அடுத்தடுத்து 2 உயிரிழப்புச் சம்பவங்கள் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததால் எங்களின் கல்விக் கனவு பாதியில் சிதைந்துபோனது.

அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் படித்தாலும் அதற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த, தற்போது எங்களுக்குப் போதிய வசதியில்லை. என் தந்தை ஜெயசீலன் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். ஆனால், மருத்துவர்கள் கரோனா மரணம் இல்லை எனக் கூறிவிட்டனர். இதனால், அரசு சார்பில் கிடைக்கும் உதவிகூட எங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

என் தந்தை மாற்றுத்திறனாளி என்பதால் சிறு வயதில் இருந்தே நான், வாரத்தில் 2 நாட்கள் காய்கறி வியாபாரத்துக்கு அவருக்கு உதவியாக வருவேன். அதன் மூலம் ஓரளவுக்கு வியாபாரம் கற்றுக்கொண்டேன். தற்போது அதிகாலை 3 மணிக்கு வியாபாரத்துக்கு வந்தால் இரவு வீடு திரும்ப இரவு 8 மணி ஆகிறது.

இதுதான் தற்போது என் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறது. எனக்கும், என் அக்காவும் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான வாய்ப்பும், உதவியும் கிடைத்தால் நிச்சயம் நாங்கள் தொடர்ந்து படிப்போம்’’ என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ''ஜெயசீலன் பிறவிலேயே மாற்றுத்திறனாளி. சிறுவயது முதல் யாரிடமும் எந்த உதவியும் எதிர்பார்க்காமல் கடைசிவரை உழைத்து வாழ்ந்தவர். தற்போது அவர் உயிருடன் இல்லை. அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்தையும், அவரது குழந்தைகளின் கல்விச் செலவையும் தமிழக அரசு ஏற்க முன்வர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x