Published : 23 Jun 2021 01:41 PM
Last Updated : 23 Jun 2021 01:41 PM

பள்ளிக் கல்வித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி 

சென்னை

பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் அதிகாரங்களை, ஆணையரிடம் ஒப்படைக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அரியலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கருணாகரன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்ற முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி துறை இணை இயக்குநராகவும், பின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு வந்தனர்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரியை அப்பதவியில் நியமித்து, பள்ளி நிர்வாகம் கண்காணிக்கப்பட்டது. ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உள்ள நிலையில், எந்தவித சிறப்புத் தகுதியும், அனுபவமும் இல்லாத ஆணையர் பதவி என்பது தேவையில்லாதது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் அதிகாரங்களை, ஆணையருக்கு வழங்கி கடந்த மே 14-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தவறு. ஆணையருக்கு பதிலாக கல்வித்துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குநராக நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 2014-ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன் பள்ளிக் கல்வித்துறை ஆணையராக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி வகித்துள்ளதாகவும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதிகாரிகள் நியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்டது எனவும், நியமனத்தில் சட்டவிரோதம் இருந்தால் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட முடியும் எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x