Published : 23 Jun 2021 12:58 PM
Last Updated : 23 Jun 2021 12:58 PM

சென்னையில் மேலும் 2 ஏடிஎம்களில் நூதனத் திருட்டு: ரூ.16.98 லட்சம் பறிபோனதாக புகார்

சென்னை

சென்னையில் மேலும் 2 ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு மேலாளர்கள் புகார் அளித்துள்ளனர். ரூ.16.98 லட்சம் திருட்டுப் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி ஏடிஎம் பணம் திருடப்படுவது வழக்கமான செய்தி. அதேபோன்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திருடுவது, திருடப்பட்ட ஏடிஎம் கார்டு, போலியாகத் தயாரிக்கப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடுவது வாடிக்கையான ஒன்று. இதில் சம்பந்தப்பட்ட ஏடிஎம் மற்றும் பணம் எடுக்கும் நேரத்தை வைத்துக் குற்றவாளிகளை போலீஸார் பிடித்துக் கைது செய்வது வழக்கம்.

ஆனால், தற்போது எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை அறிந்த வங்கி அதிகாரிகள் அதிர்ந்து போயினர். பொதுவாக ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்கும்போது பணம் வெளியில் வரும். அதை 15 நொடிகளில் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் எந்திரத்திற்குள் சென்றுவிடும். பணம் மீண்டும் சம்பந்தப்பட்டவர் வங்கிக் கணக்கிற்கே சென்றுவிடும்.

இதைப் பயன்படுத்தி பணத்தை எடுப்பதுபோல் எடுத்துப் பணத்தை வெளியில் எடுக்காமல் எந்திரத்துக்குள்ளும் செல்லாமல் பிடித்துக்கொண்டு பின்னர் எந்திரம் அதன் செயலை நிறுத்தியவுடன் பணத்தை எடுத்துள்ளனர். இதன் மூலம் எந்திரம் பணத்தை வாடிக்கையாளர் எடுக்கவில்லை எனத் தகவல் அனுப்பி, பணத்தை மீண்டும் வாடிக்கையாளர் கணக்கிற்கே திருப்பிவிடும். ஆனால், இவர்கள் பணத்தைக் கையில் பிடித்திருந்ததால் பணத்தை எடுத்துக்கொள்வார்கள்.

இது வங்கி அதிகாரிகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாது. பணம் குறைந்தால் பணத்தை டெபாசிட் செய்பவர் சிக்குவார். ஆனால், பணம் ஒரே நேரத்தில் மொத்தமாக எடுக்கப்பட்டும், பணம் எடுக்கப்படவில்லை என்று வங்கியின் சர்வருக்கு எந்திரம் தகவல் அனுப்பிவிடும். இந்த மோசடி மூலம் எவ்வளவு பணம் எடுத்தாலும், சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் பணம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணம் காலியாகிக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு தொடர்ச்சியாகப் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இந்த கும்பல் பல லட்சம் ரூபாயைத் திருடியுள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இவ்வாறு பணத்தை எடுப்பவர்களுக்கு ஏடிஎம் அட்டை இருக்கவேண்டும். அதுகுறித்து விசாரித்தபோது அவர்கள் போலிப் பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்துள்ளதும் தெரியவந்தது.

இதுபோன்று ரூ.50 லட்சம் அளவில் பணம் திருட்டுப் போனது தெரியவந்தது. இந்த வழக்கில் தற்போது 3 பேர் ஹரியாணாவில் பிடிபட்டுள்ளனர். இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மேலும் இரண்டு ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

சென்னை, புரசைவாக்கம் அழகப்பா சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் ஜூன் 17ஆம் தேதி இரவு 8.49 மணி முதல் 9.06 மணிக்குள் வங்கிப் பணம் செலுத்தும் இயந்திரத்தை CDM முறைகேடாகப் பயன்படுத்தி ரூபாய் 1,18,000 பணத்தை மர்ம நபர்கள் இருவர் எடுத்துவிட்டதாக வங்கி மேலாளர் அபிஷேக் குமார் வர்மா வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோன்று வேப்பேரி பிரதான சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு வெளியே உள்ள அறையில் இரண்டு ஏடிஎம்கள் உள்ளன. அதில் பணம் எடுக்கக்கூடிய இயந்திரத்தில் ஜூன் 18-ம் தேதி காலை 11 மணியளவில் பணம் ரூபாய் 15,71,300/- பணத்தை இரண்டு சந்தேக நபர்கள் ஜூன் 15, 17ஆம் தேதி வரை ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூபாய் 10,000 வீதம் 190 முறை பணம் எடுத்துள்ளனர் எனத் தெரியவந்ததின் பேரில் வங்கி மேலாளர் ராஜ்குமார் நேற்றிரவு வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கு மத்திய குற்றப் பிரிவு வங்கி பணமோசடி தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கும் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x