Published : 23 Jun 2021 08:47 AM
Last Updated : 23 Jun 2021 08:47 AM

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் உறுப்பினராக அரசியல் இடையூறு கூடாது: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் உறுப்பினராவதற்கு எந்தவிதமான அரசியல் இடையூறும் இருக்க கூடாது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை:

"கூட்டுறவு அமைப்பானது பயனாளிகள் ஒன்றுகூடி மக்களாட்சி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்களுக்கும் சமுதாயத்திற்கும் முழுமையாக சேவை செய்யக்கூடிய சட்டத்திட்டங்களால் உருவாக்கப்பட்டதுதான் கூட்டுறவு அமைப்பாகும்.

ஆனால், இன்று தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் அரசியல் புகுந்து முறையான கூட்டுறவு இயக்கமாக நடைபெறவில்லை. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு இல்லாமலும் வெளிப்படை தன்மை இல்லாமலும் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினராக சேரும் வகையில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது கூட்டுறவு தத்துவத்திற்கு முற்றிலும் முரணானதாகும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்களாக விவசாயிகள் சேர்வதற்கான தேதி 22.06.2021 அன்று கடைசி என்று சொல்லப்படுகிறது. ஆனால், விவசாயிகள் வேளாண் வங்கிகளில் விண்ணப்பம் கேட்டால் வங்கி ஊழியர்கள் விண்ணப்பம் இல்லை என்கிறார்கள். கூட்டுறவு சங்கத்தில் அனைவரும் இணைவதுதான் கூட்டுறவு அமைப்பின் கொள்கையாகும்.

ஆகவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அனைவரும் சிறு, குறு விவசாயிகள், பணக்காரர், ஏழை, சாதி, மதம் என்று எந்தவிதமான வேறுபாடு இல்லாமலும் எந்தவிதமான அரசியல் தலையீடு இல்லாமலும் வெளிப்படை தன்மையோடு அனைவரும் உறுப்பினர் ஆகும் வகையில், மூன்று மாதகாலம் அவகாசம் அளிக்க வேண்டும்.

அந்தந்த கூட்டுறவு சங்கங்களிலேயே விண்ணப்பங்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கியின் அடிப்படை நோக்கத்தையும் கொள்கையையும் காக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x