Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு 1 லட்சம் படுக்கைகள் தேவைப்படும்: சி.விஜயபாஸ்கர் கோரிக்கை

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் குழந்தைகளுக்காக 1 லட்சம் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் அவர் நேற்று பேசியதாவது:

சீனாவில் 2019 டிசம்பரில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட செய்தி வெளியானது முதல் அதிமுக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. போர்க்கால அடிப்படையில் வலுவான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்கினோம். அடுத்து 3-வது அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். அதை எதிர்கொள்ள மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் சுமார் 2 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. 3-வது அலையில் 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டால்கூட 20 லட்சம்பேருக்கு தொற்று ஏற்படும். அதில் 10 சதவீதம் பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சுமார் 2 லட்சம் குழந்தைகளை அனுமதிக்க வேண்டியிருக்கும். எனவே, தமிழக அரசு குழந்தைகளுக்காக 1 லட்சம் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

18 வயதுக்கு கீழ் உள்ளகுழந்தைகளின் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அப்போது 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், தாய்மார்களை தொற்றில் இருந்து காக்க முடியும்.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதைஅரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு சி.விஜயபாஸ்கர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x