Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

நத்தம் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கல்லால் தாக்கிக் கொலை: காதலியின் தாய், தந்தை, சகோதரர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காதலியின் கண் முன்னே அவரது காதலனை கல்லால் தாக்கிக் கொலை செய்த காதலியின் குடும்பத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த சேதுராஜன் மகன் பாரதிராஜா (21). கேட்டரிங் படித்துவிட்டு, தனியார் தோட்டத்தில் வேலை செய்தார். இவர் மூங்கில்பட்டி முல்லை நகரைச் சேர்ந்த ராசு மகள் பரமேஸ்வரியை (20) 5 ஆண்டுகளாக காதலித்தார். இது அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதை யடுத்து பரமேஸ்வரியை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த பாரதிராஜா முல்லைநகர் பகுதிக்கு நண்பர்களுடன் சென்றார். அங்கு பரமேஸ்வரியை வரச்சொல்லி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இதையறிந்த பரமேஸ்வரியின் பெற்றோர், அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி பாரதிராஜாவுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது மலைச்சாமி பாரதிராஜாவை கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

நத்தம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரியின் தந்தை ராசு (63), தாய் அழகுநாச்சி (58), அண்ணன்கள் மலைச்சாமி (33), பாலகுமார் (28) ஆகியோரைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x