Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநரிடம் பணம் பிடித்தம் ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் அரசு விரைவு போக்கு வரத்துக் கழக ஓட்டுநராகப் பணிபுரிந்து, 30.4.2020-ல் ஓய்வு பெற்றவர் ஜி.செந்தில். இவர் ஓய்வு பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு, அவரது பணிக்காலத்தில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்த தண்ட னையை நிறைவேற்ற முடியாத தால், அதற்காக ரூ.75,900 செலுத்த உத்தரவிடப்பட்டது.

பணம் செலுத்திய பிறகே பணி முடிவு நற்பயன் பிரிவுக்கு பணிப்பதிவேடு அனுப்பப்படும் எனக் கூறப்பட்டதால் பணத்தை செலுத்தி செந்தில் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் பணம் பிடித்தம் செய்யும் உத்தரவை ரத்து செய்து, செலுத்திய பணத்தை 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்கக்கோரி செந்தில் உயர் நீதிமன்றக் கிளை யில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற ஒரு ஆண்டு உள்ளவர்களிடம் பணம் பிடித்தம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் மனுதாரரிடம் பிடித்தம் செய்த பணத்தை 4 வாரத்தில் திரும்ப வழங்க வேண்டும் என உத்தர விட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. செந்தில் சார்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழக ஊதிய ஒப்பந்தத்தில் பணம் பிடித்தம் செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படியே பணம் பிடித்தம் செய்யப்பட்டது என போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த முடியாது.

நிலையாணை அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே பிடித்தம் செய்த பணத்தை 12 வாரத்தில் திரும்ப வழங்க வேண்டும். தவறினால் 20.7.2020 முதல் 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும். மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x