Last Updated : 22 Jun, 2021 08:29 PM

 

Published : 22 Jun 2021 08:29 PM
Last Updated : 22 Jun 2021 08:29 PM

60 நாட்களாக பிணவறையில் இருக்கும் கைதி உடல்: அரசு சார்பில் அடக்கம் செய்யப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை

பாளை சிறையில் கொலையான கைதியின் உடல் 60 நாளாக பிணவறையில் இருக்கும் நிலையில் உடலை வாங்காவிட்டால் அரசு சார்பில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நெல்லை வாகைக்குளத்தைச் சேர்ந்த பாவனாசம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் முத்து மனோ (27), கொலை மிரட்டல் வழக்கில் களக்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏப். 22-ல் முத்து மனோ சக கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கொலை நடைபெறுவதற்கு முன்பு வரை முத்து மனோ ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பாளை சிறைக்கு மாற்றிய நாளில் அவர் கொலை செய்யுப்பட்டுள்ளார். அவரை பாளை சிறைக்கு மாற்றியதில் உள்நோக்கம் உள்ளது.

முத்து மனோ கொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும், சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், மனுதாரரின் மகன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து 60 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் உடலை பெற்றுக் கொள்ளவில்லை என கூறப்பட்டது. மனுதாரர் ஆஜராகி, இன்னும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், 60 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் மனுதாரர் தனது மகனின் உடலை வாங்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவில் உடன்பாடு இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் வேறு நீதிபதி விசாரணைக்கு கோர வேண்டும்.

எதுவும் செய்யாமல், நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. எனவே, மனுதாரர் தனது மகனின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் அரசு சார்பில் மனுதாரரின் மகனின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிடப்படும் என்று கூறி விசாரணையை ஜூன் 29-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x