Last Updated : 22 Jun, 2021 05:38 PM

 

Published : 22 Jun 2021 05:38 PM
Last Updated : 22 Jun 2021 05:38 PM

சேலம் அருகே சந்தன மரங்களை வெட்டிக் கடத்தல்: மக்கள் புகார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே குண்டுக்கல் மலை கிராமத்தில் மர்ம கும்பல் தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டி பொதுமக்கள் தமிழக வனத்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்டுக்கல் மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒலக்கூர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பதினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காய்கறிகள், வாழை மற்றும் மலைப்பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இங்குள்ள சில விவசாயிகளின் நிலங்களில் இயற்கையாகவே அதிக அளவில் சந்தன மரங்கள் வளர்ந்து வருகின்றன.

சுமார் பத்தாண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வளர்ந்துள்ள பழமையான சந்தன மரங்களும் உண்டு. இதுபோன்ற சூழ்நிலையில், மர்ம கும்பல், விவசாய நிலங்களில் வளர்ந்துள்ள சந்தன மரங்களை அடிக்கடி வெட்டிக் கடத்தி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தனியார் விவசாய நிலங்களில் சந்தன மரங்கள் வெட்டுவது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட விவசாயிகள் புகார் கொடுத்திருந்தும், இதுசம்பந்தமாக அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.

இதனால், மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவது தொடர்கிறது. இந்நிலையில், ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள நான்கு சந்தன மரங்கள் அடுத்தடுத்து மர்ம கும்பலால் வெட்டப்பட்டுக் கடத்தப்பட்டுள்ளன. இதையறிந்த சவுந்திரராஜன் டேனீஸ்பேட்டை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். ஆனால், வனத்துறை தரப்பில் தனியார் நிலம் என்பதால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், போலீஸார் புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல், எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருந்து வந்தனர். அந்தப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டிக் கடத்தியுள்ளது. டேனீஸ்பேட்டை வனப்பகுதியில் சந்தன மரங்கள் தொடர்ந்து கடத்தப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக வனத்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர். சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தன மரங்களை வெட்டிக் கடத்தும் மர்ம கும்பலைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அனுப்பியுள்ள புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x