Last Updated : 22 Jun, 2021 05:28 PM

 

Published : 22 Jun 2021 05:28 PM
Last Updated : 22 Jun 2021 05:28 PM

50 நாட்களாகியும் அமைச்சரவை அமையாத புதுச்சேரி; பட்டியலைத் தந்துவிட்டதாகத் தெரிவிக்கும் பாஜக: தொடர் மவுனத்தில் ரங்கசாமி

புதுச்சேரி

தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்களாகியும், சிறிய மாநிலமான புதுச்சேரியில் அமைச்சரவையை அமைக்கமுடியாத அவலமே நீடிக்கிறது. அமைச்சர்கள் பட்டியலை முதல்வரிடம் தந்துவிட்டதாக பாஜக தெரிவித்து ஒரு வாரம் கடந்துள்ளது. ஆனால், முதல்வர் ரங்கசாமியோ தனது கட்சியிலுள்ள நெருக்கடியால் தொடர் மவுனத்திலேயே உள்ளார்.

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்களைக் கடந்தும், முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்று 45 நாட்களைக் கடந்தும் இதுவரை அமைச்சர்கள் பதவியேற்காத நிலை உள்ளது. புதுவை மாநிலத்தோடு தேர்தல் நடந்த தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்று சட்டப்பேரவையைக் கூட்டி அடுத்தடுத்த பணிகளுக்குச் சென்றுவிட்டனர். ஆனால் சிறிய மாநிலமான புதுச்சேரியிலோ அமைச்சரவை அமைவதிலேயே முதல் முறையாக நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடக்கத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவில் அமைச்சர்கள் எவ்வளவு பேர் என்று பிரித்துக்கொள்வதில் மோதல் ஏற்பட்டது. பின்னர் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதன்பின் பாஜக தரப்பில் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோர் அமைச்சர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். இதனிடையே பாஜக பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜான்குமாரை நீக்கிவிட்டு, ஊசுடு தனித் தொகுதியைச் சேர்ந்த சாய்சரவணக்குமாரைப் பரிந்துரை செய்தது.

என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அமைச்சர்கள் யார் என்பதை ரங்கசாமி முடிவு செய்யவில்லை. இதுவரை முதல்வர் ரங்கசாமி அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து வழங்கவில்லை. சென்னை சென்ற ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி திரும்பவில்லை. அவர் தெலுங்கானா சென்றுவிட்டார்.

பாஜக தரப்பில் அமைச்சர்கள் பதவியேற்காததற்கு நாங்கள் காரணமில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து சட்டமன்ற கட்சித்தலைவர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, "பாஜக தரப்பில் அமைச்சர்கள் பட்டியலை முதல்வரிடம் வழங்கி ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டது. அமைச்சர்கள் பதவியேற்பு காலதாமதத்துக்கு பாஜக காரணம் இல்லை" எனத் தெரிவித்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, "என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவியைப் பெற கடும் முயற்சியில் உள்ளனர். தங்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் எனப் பலவிதத்திலும் ரங்கசாமிக்கு நெருக்கடியைக் கட்சி எம்எல்ஏக்கள் கொடுக்கின்றனர். ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் மற்றவர்கள் அதிருப்தியடைவார்கள். இதனால் வழக்கமான தனது யுக்தியான காலதாமதப்படுத்தும் பணியை ரங்கசாமி செய்து வருகிறார்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x