அபாயத்தை உணராமல் நடுக்கடலில் பேனர் வைக்கப் போட்டியிடும் ரசிகர்கள்: விஜய் பேனரைக் கட்டி படகில் சென்று பால் அபிஷேகம்

அபாயத்தை உணராமல் நடுக்கடலில் பேனர் வைக்கப் போட்டியிடும் ரசிகர்கள்: விஜய் பேனரைக் கட்டி படகில் சென்று பால் அபிஷேகம்
Updated on
1 min read

அபாயத்தை உணராமல் நடுக்கடலில் பேனர் வைக்க ரசிகர்கள் போட்டியிடும் சூழல் புதுச்சேரியில் அதிகரித்துள்ள நிலையில், விஜய் பிறந்த நாளையொட்டி அவரது பேனரை நடுக்கடலில் கட்டி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.

புதுச்சேரியின் கடற்கரையில்தான் 1861ஆம் ஆண்டு கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. கடற்கரையில் இருந்து கடல் நோக்கி 192 மீட்டர் நீளத்துக்குப் பாலம் அமைந்தது. ஆறு ஆண்டு பணிகள் நடந்தன. 1866ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கடல் பாலம் திறக்கப்பட்டது. 1952இல் வீசிய புயலில் புதுவை துறைமுகமும், கடல் பாலமும் முற்றிலும் மறைந்துபோனது. தற்போது காந்தி சிலைக்குப் பின்னே சிறு கம்பிகளாக கடல் பாலத்தின் சாட்சிகளாக உள்ளன அக்காலக் கம்பிகள்.

இக்கம்பிகள் தற்போது பேனர் கட்டப் பயன்படுத்தப்படுகின்றன. அபாயகரமான முறையில் படகில் சென்று பேனரைப் பலரும் கட்டுகின்றனர். இது அபாயகரமான முறை என்றாலும் அதைப் பலரும் செய்கின்றனர். புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பலரும் பேனர்களை வைத்து, தங்களின் பலத்தை நிரூபிப்பது வழக்கம். ஏற்கெனவே அஜித், சிம்பு, தனுஷ் ரசிகர்கள் படகில் சென்று பேனர்களை அங்கே கட்டுவது வழக்கமாக இருந்தது. அதை போலீஸார் மீனவர் உதவியுடன் அகற்றுவதும் வழக்கம்.

இந்நிலையில் இன்று விஜய் பிறந்த நாளையொட்டி கடற்கரை சாலை, காந்தி சிலை பின்புறம் கடலில் உள்ள இரும்புத் தூண்களில் விஜய் பேனரைக் கட்டியுள்ளனர். படகு மூலம் சென்று பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

இதுபற்றி போலீஸாரிடம் விசாரித்தபோது, "நடுக்கடலில் அரியாங்குப்பம் விஜய் மன்றத்தினர் பேனரைக் கட்டி படகில் சென்று பால் அபிஷேகம் செய்துள்ளனர். கடலில் இரும்புத் தூண்களில் பேனர் கட்டி வைப்பது அபாயகரமானது. அதையும் தாண்டி இம்முறை படகில் சென்று பால் அபிஷேகம் செய்துள்ளனர். இது மிக ஆபத்தானது. ஆனால், திரைப்படக் கதாநாயகர்கள் இதைக் கண்டுகொள்ளாமல் ஊக்குவிப்பதால் ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் இதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்”என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in