குன்னூரில் நடைபெற்ற சிறப்பு ஏலத்தில் ஒரு கிலோ தேயிலைத் தூள் ரூ.16,400-க்கு விற்பனை

குன்னூரில் நடைபெற்ற சிறப்பு ஏலத்தில் ஒரு கிலோ தேயிலைத் தூள் ரூ.16,400-க்கு விற்பனை
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற சிறப்பு ஏலத்தில் ஒரு கிலோ தேயிலைத் தூள் ரூ.16,400-க்கு விற்பனையானது.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. அரசு சார்பில் 16 தொழிற்சாலைகள் மற்றும் 180 தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. வாரத்துக்கு சுமார் 15 லட்சம் கிலோ தேயிலைத் தூள், ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பெருவாரியாக ஆர்தோடக்ஸ், சிடிசி டஸ்ட் ஆகிய இரு ரகங்களும், கைகளாலேயே தயாரிக்கக் கூடிய சிறப்பு தேயிலைகளான ஒயிட் டீ, கிரீன் டீ, பிளாக் டீ ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன. கைகளால் தயாரிக்கக் கூடியதேயிலையின் அளவு குறைவு என்பதால், அவற்றின் விலை அதிகமாகும். இங்கு உற்பத்தியாகும் தேயிலைத் தூள், அரசு ஏல மையமான இன்ட்கோசர்வ் மற்றும் தனியார் ஏல மையமானகுன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கம் மூலம் ஏலம் விடப்படுகிறது.

சர்வதேச தேயிலை தினத்தையொட்டி, குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கம் சார்பில், சங்க அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக சிறப்பு ஏலம் நடந்தது. இதில் மொத்தம் 4,043 கிலோ தேயிலை தூள் ஏலத்துக்கு வந்தது. ஒரு கிலோ தேயிலைத் தூள் ரூ.16,400-க்கு ஏலம் போனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் வைரவன் கூறும்போது, ‘‘சிறப்பு ஏலத்தில், அவதா நிறுவனத்தின் சில்வர் நீடில் எக்ஸ்எல் என்ற தேயிலைத் தூள் ரகம், ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.16,400-க்கு ஏலம்போனது. அவதா சில்வர் நீடில் என்ற ரக தூள் ஒரு கிலோ ரூ.15,300-க்கு ஏலம்போனது. குன்னூரைச் சேர்ந்த கணபதி தேயிலை வர்த்தகர்கள், அவதா சில்வர் நீடில் எக்ஸ்எல் மற்றும் சில்வர் நீடில் தேயிலைத் தூளை தலா இரு கிலோ என மொத்தம் 4 கிலோ வாங்கினர். மீதமுள்ள 3,468 கிலோ தேயிலைத் தூள் சராசரியாக ரூ.224-க்கு விற்பனைசெய்யப்பட்டது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in