Last Updated : 21 Jun, 2021 07:47 PM

 

Published : 21 Jun 2021 07:47 PM
Last Updated : 21 Jun 2021 07:47 PM

தொண்டர்களுக்காக இனிமேல் பின்வாங்க மாட்டேன்: அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியீடு

சிவகங்கை

‘‘தொண்டர்களுக்காக இனிமேல் பின்வாங்க மாட்டேன்,’’ என சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். தேர்தல் முடிந்து, அதிமுக ஆட்சியை இழந்தநிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து மொபைலில் பேசி சசிகலா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அதிமுக மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் சரவணன் என்பவரிடம் சசிகலா பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது.

அதில் சசிகலா பேசியதாவது: அதிமுக தொண்டர்கள் கவலையாக உள்ளனர். என்னை மீண்டும் வர வேண்டுமென தொண்டர்கள் விரும்புகின்றனர்.

தற்போது வெற்றி பெற்ற தொகுதிகள், ஏற்கெவே தலைவர் (எம்ஜிஆர்), அம்மா (ஜெயலலிதா) காலத்திலயே வென்றவை தான். தொண்டர்கள் என்னுடன் இருப்பதால் நிச்சயம் வந்துவிடுவேன்.

தனிநபர்கள் கட்சி நடத்துகின்றனர் என நான் நினைத்தேன். அதையே தொண்டர்களும் கூறுகின்றனர். இதனால் எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் வருவேன். இனிமேல் பின்வாங்க மாட்டேன். என்னால் அம்மா (ஜெயலலிதா) ஆட்சி அமைவது கெட்டுபோகக் கூடாது என்பதற்காக ஒதுங்கியிருந்தேன். ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. கோடான கோடி தொண்டர்களை பணத்தால் வாங்க முடியுமா? ஈபிஎஸ் சார்ந்துள்ள சமுதாய மக்கள் தலைவர், அம்மா காலத்தில் இருந்தே அதிமுகவிற்கு தான் வாக்களித்து வந்துள்ளனர்.

மேலும் தலைவர் காலத்து ஆட்களை கைவிட்டுவிட்டனர் என்பதை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. நமது கட்சியை பொறுத்தவரை தொண்டர்கள் கட்சி. தொண்டர்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x