கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களை கடுமையாக கையாள வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களை கடுமையாக கையாள வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

அரசின் சொத்துக்களான கனிம வளங்களை உரிமம் இல்லாமல் கொள்ளையடிப்பவர்களை கடுமையான முறையில் கையாள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அரசின் சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை அரசு, கடுமையாக கையாள வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

உரிமம் இல்லாமல் கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திய நீதிபதிகள், இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in