Published : 21 Jun 2021 11:47 AM
Last Updated : 21 Jun 2021 11:47 AM

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது: வைகோ எதிர்ப்பு

ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியாத ஒரு வழக்கறிஞரை, மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது. அவ்வாறு முயல்வது, உயர் நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பறிக்கின்ற முயற்சியே ஆகும் என வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

''மாநில உயர் நீதிமன்றங்களின் செயல்பாடு, உரிமை மற்றும் அதிகார ஆள்வரை ஆகியவற்றைப் பறிக்கும் வகையிலான ஒரு செயல் திட்டத்தை, உச்ச நீதிமன்ற பதிவு பெற்ற வழக்கறிஞர் சங்கமும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும் இணைந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அளித்துள்ளது.

அதில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை மாநில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 217க்கு எதிரானது. ஒரு மாநில நீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியாகவே அமையும்.

ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியாத ஒரு வழக்கறிஞரை, மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது. அவ்வாறு முயல்வது, உயர் நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பறிக்கின்ற முயற்சியே ஆகும். இத்தகைய முயற்சி, மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள தகுதிவாய்ந்த வழக்கறிஞர்களின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதாகும்.

இந்தி பேசாத மாநிலங்களில், இந்திக்காரர்களைக் கொண்டுவந்து அதிகாரத்தில் உட்கார வைக்க முயல்வதும் ஒரு இந்தித் திணிப்பே ஆகும். இது தமிழக நலனுக்கு எதிராக அமையும். இத்தகைய கோரிக்கையை, உச்ச நீதிமன்றமோ, மத்திய அரசோ ஏற்றுக்கொள்ளக் கூடாது என மதிமுக சார்பில் வலியுறுத்துகின்றேன்''.

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x