Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM

இந்த ஆண்டில் இருக்கிறதா, இல்லையா?- நீட் தேர்வு குறித்து தற்போது உறுதியாக கூற முடியாது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நீட் தேர்வு இந்த ஆண்டு இருக்கிறதா, இல்லையா என்பதை தற்போது உறுதியாக சொல்ல முடியாது. இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கத்தான் செய்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை பெருங்குடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அவர்களுக்கு ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்கள், அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், துணை இயக்குநர் தர்மலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

சென்னையில் 1,324 பேர் உட்பட தமிழகத்தில் 11,490 தொழுநோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட உள்ளது. தற்போது,பெருங்குடியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படும்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது. பிரதமரை சந்தித்தும் இதுதொடர்பாக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், சிலர் நீட் தேர்வுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதை தற்போது உறுதியாகச் சொல்ல முடியாது. இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை 20 நாட்களில் வந்துவிடும். அதன்பிறகு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் நீட் தேர்வு குறித்து உறுதியாக கூறமுடியும்.

தமிழகத்துக்கு இதுவரை 1.26 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1.18 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வீணானதுபோக 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த மாதத்துக்கு 42 லட்சம் தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. அதில் 24 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 2,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான மருந்துகள் தேவையான அளவு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x