Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

கட்சி மறுகட்டமைப்பு: நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை

கடந்த சட்டப்பேரவை தேர்தலில், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவர், பொதுச் செயலாளர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இருப்பினும், இதுவரை கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் கமல்ஹாசன் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கட்சியில் நிலவும் தற்போதைய சூழல், கட்சியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதுதொடர்பாக, கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘கட்சியினை மறுகட்டமைப்பு செய்து மேம்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்காக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து கட்சியில் நிலவும் சூழல், அடிமட்டத்தில் கட்சியின் தொண்டர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது, கட்சியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து வருகிறார். அவர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சந்திப்புகள் ஒரு சில வாரங்களில் முடிவடைந்துவிடும். அதன்பிறகு, கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x