Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படும்: நபார்டு வங்கித் தலைவர் சிந்தாலா தகவல்

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சியை எட்டுவது தொடர்பாக, நபார்டு வங்கித் தலைவர் சிந்தாலா (வலமிருந்து 2-வது) முன்னிலையில், தமிழ்நாடு நபார்டு வங்கி தலைமைப் பொதுமேலாளர் எஸ்.செல்வராஜ் (வலது ஓரம்) மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர்ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சென்னை

தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டில் நபார்டு வங்கியின் நிதியுதவி ரூ.40 ஆயிரம் கோடியாக இருக்கும் என அவ்வங்கியின் தலைவர் சிந்தாலா தெரிவித்துள்ளார்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) தலைவர் டாக்டர் ஜி.ஆர்.சிந்தாலா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இரு தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.3 ஆயிரம் கோடிவரை உதவி, நபார்டு உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு, மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி,பால்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, நபார்டு வங்கி மூலம் அளிக்கப்படும் நிதி உதவிகள் குறித்து விவாதித்தார்.

கூட்டுறவு வங்கிகள், தமிழ்நாடுகிராம வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு நிதி உதவிகளை அதிகரிப்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், தமிழகத்துக்கு நபார்டு வங்கியின் நிதியுதவி ரூ.40 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதியை விட 87 சதவீதம் அதிகமாகும்.

நபார்டு வங்கியின் தலைவர், மாநிலத்தின் முக்கிய வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கு கடன் வழங்குதல் தொடர்பாகவும், கிராமப்புற கடன்தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

அத்துடன், வங்கியில்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன், இந்தத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம்,தெள்ளாறு உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வேளாண் வணிக வளாகத்தை திறந்து வைத்து, வணிக ஊக்குவிப்பு முயற்சிகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊரக உள்ளடக்கிய வளர்ச்சிஎனும் லட்சியத்தின் அடிப்படையில், நபார்டு வங்கிக்கும், பாரதஸ்டேட் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சிந்தாலா முன்னிலையில், தமிழ்நாடு நபார்டு வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரி டையே கையெழுத்தானது. நபார்டு வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x