Last Updated : 21 Jun, 2021 03:16 AM

 

Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM

இன்று தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா?

கும்பகோணம்

திமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணத்தை தலைமையிட மாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக் குறுதியை நிறைவேற்றும் வகை யில், அதற்கான அறிவிப்பு இன்று (ஜூன் 21) தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியாகுமா என கும்பகோணம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் கால் நூற்றாண்டு காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் புதிதாக சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்டபோதே, கும்பகோணமும் அந்தப் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என தொகுதிகள்தோறும் மக்களின் குறைகளைக் கேட்கும் நிகழ்ச்சி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட திருக்கடையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், கோவி.செழியன் ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்று, திமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பின்னர், ஒரத்தநாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசியபோதும், திமுக ஆட்சிக்கு வந்ததும் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்நிலையில், தேர்தலில் வெற்று பெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமையிலான ஆட்சியின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (ஜூன் 21) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில், கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் கூறியது: கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என பலகட்ட போராட்டங்களை நடத்தி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். புதிய மாவட்டத்துக்கான அனைத்து தகுதிகளும் இருப்பதால், இனியும் காலதாமதம் செய்யாமல் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அதுகுறித்து அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக, இத்தொகுதிகளில் உள்ள திமுக எம்எல்ஏக்களிடம் மனுக்கள் அளித்துள்ளோம் என்றார்.

அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணன் கூறியது: மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களும் கும்பகோணத்தில் செயல்பட்டு வருகின்றன. ஆட்சியர் அலுவலகம் மட்டுமே கட்டப்பட வேண்டும். புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டால் இப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும்.

கடந்த காலங்களில் சில அரசியல் நிலைப்பாடு காரணமாக புதிய மாவட்டம் அறிவிக்கப்படாமல் போனது.

தற்போது, அதற்கு ஏற்ற சூழல் வந்துள்ளது. திமுகவின் தேர்தல் பிரச்சார வாக்குறுதியில் முதன்மையானது கும்பகோணம் மாவட்டம்தான். எனவே, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்படுவதுபோல, கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கைக்கும் தீர்வுகாண வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x