Published : 20 Jun 2021 01:22 PM
Last Updated : 20 Jun 2021 01:22 PM

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 வரை நீட்டிப்பு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 28 வரை நீட்டித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிவிப்பு:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஊரடங்கு வரும் 21-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், 19-6-2021 அன்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த ஊரடங்கை 28-6-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 2 - (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3 - (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x