Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

தளர்வுகளுடன் முழு ஊரடங்கு ஜூன் 28 வரை நீட்டிப்பு: தமிழக அரசின் அறிவிப்பு இன்று வெளியாகிறது

சென்னை

தமிழகத்தில் முழு ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28-ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத் தில் மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதி கரித்ததால் கடந்த மே 24 முதல் தளர் வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அடுத்தடுத்து மே 31, ஜூன் 7, ஜூன் 14-ம் தேதி என 3 கட்டமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், தொற்று அதிகமாக இருந்த 11 மாவட் டங்களில் குறைவான தளர்வுகளும் மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அதிகமான தளர்வுகளும் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மருத்துவ நிபுணர் குழுவினர், அரசு அதிகாரிகள், சிறப்பு பணிக்குழுவினருடன் ஆலோசனை நடைபெற்றது.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவு மியா சுவாமிநாதன், தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநர் பிரப்திப் கவுர், உலக சுகாதார அமைப்பின் முது நிலை மண்டல குழு தலைவர் கே.என்.அருண்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையின் போது, தற்போது தொற்று அதிகமாக உள்ள கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அதிகம் வேண்டாம். இதர 30 மாவட்டங்களில் மாவட்டங்களுக்குள் மட்டும் அரசு பேருந்துகளை 50 சதவீதம் பயணிகளுடன் தேவைப்படும் வழித்தடங் களில் இயக்கலாம். துணி, நகைக் கடை களுக்கு அனுமதியளிக்கலாம் என்பது உள் ளிட்ட தளர்வுகளை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைகள் குறித்தும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் முதல்வர் அடுத்தகட்டமாக ஆலோசனை நடத்தினார். இதில், ஊரடங்கை வரும் ஜூன் 28-ம் தேதி வரை நீட்டிக்கவும் பேருந்து போக்குவரத்து போன்ற சலுகைகளை எந்த அளவுக்கு அனுமதிப்பது குறித்தும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு நேற்று இரவு வரை வெளியாகாத நிலையில், இன்று வெளியாகும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x