Published : 19 Jun 2021 03:16 PM
Last Updated : 19 Jun 2021 03:16 PM

ட்ரோன் கேமரா மூலம் புவி சார்ந்த தகவல் அடிப்படையில் கோயில் சொத்துகள் கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை

கோயில் சொத்துகளை ட்ரோன் கேமரா மூலம் புவி சார்ந்த தகவல் அடிப்படையில் கண்டறிந்து வருவதாகவும், இந்தப் பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தையும், பிரசித்தி பெற்ற கோயில்களின் தனிப்பட்ட இணையதளங்களையும் முறையாகப் பராமரிக்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராதா ராஜன் 2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கைக் கடந்த ஆண்டு ஆண்டு நவம்பர் மாதம் முதல், நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் அவற்றின் சொத்துகளின் விவரங்கள், அந்த சொத்துகள் குத்தகையில் உள்ளனவா?, வாடகையில் உள்ளனவா? என்பன உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி நவம்பர் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

கோயில் சொத்துகளை ஆய்வு செய்யும் அறநிலையத் துறையினருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் நான்கு நான்கு மாவட்டங்களாகத் தகவல் சேகரிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில் சொத்துகளைக் கண்டறிவது மற்றும் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்திலான ஜெயபாரதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிக்கை ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், “கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகள் காரணமாக நில அளவையர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் அப்பணிகளில் ஈடுபடுத்தப்படாததால், கோயில் சொத்துகளைக் கண்டறிந்து ஆய்வு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கோயில் சொத்துகளைக் கண்டறிவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், கரோனா பரவலால் ஆய்விற்கு அனுப்ப முடியவில்லை. அதற்கு மாற்றாக ட்ரோன் கேமரா மூலம் முப்பரிமாண அடிப்படையில் படமெடுக்கப்பட்டு, கோயிலுக்குச் சொந்தமான நிலம் அல்லது கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து நீள, அகல, உயர அடிப்படையில் அறிந்துகொள்ளும் ஜி.ஐ.எஸ். எனப்படும் புவி சார்ந்த தகவல் முறையில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அவை ஆவணமாக மாற்றப்பட்டு அந்தச் சொத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. கோயில் சொத்துகளின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய வாடகை அல்லது குத்தகையின் நிலை உள்ளிட்ட விவரங்களும், ஜி.ஐ.எஸ். விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்தப் பணிகள் துல்லியமான விவரங்களுடன் விரைவில் முடிக்கப்படும்” என இந்துசமய அறநிலையத்துறை அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை ஜூலை 21 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x