Published : 19 Jun 2021 02:32 PM
Last Updated : 19 Jun 2021 02:32 PM

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

சென்னை

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனையைத் தொடங்கினார். தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.

தமிழகத்தில் நிபுணர்கள் அறிவித்தபடி இரண்டாம் அலை பரவல் விரைவாக வந்தது. மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் ஆரம்பித்த இரண்டாம் அலை பரவல், மே மாதத்தில் உச்சம் தொட்டது. தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. ஒரு நாளைக்கு 36,000 தொற்று எண்ணிக்கை என உச்சம் தொட்டது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஊரடங்கை அமல்படுத்தி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டது. பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க நிவாரண நிதி, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்தது. பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறைந்ததால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

நேற்று தமிழகத்தில் மொத்த பாதிப்பு 10,000-க்கும் கீழே 8,633 என்கிற எண்ணிக்கையிலும், சென்னை பாதிப்பு 500-க்கும் கீழே 492 என்கிற எண்ணிக்கையிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 89,009 ஆகக் குறைந்துள்ளது. தினசரி குணமடைவோர் எண்ணிக்கையும் 19,860 ஆக அதிகரித்துள்ளது.

இதுபோன்ற முன்னேற்றங்களை அடுத்து ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 7 நாட்களுக்கு ஒரு முறை ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தளர்வுகள், கட்டுப்பாடுகளை அறிவிக்கிறார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அமலான ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழகத்தில் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது குறித்து மருத்துவ நிபுணர்கள் திருப்தி தெரிவித்தனர்.

தடுப்பூசியை அதிகப்படுத்துவது, அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள், சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதே தொற்றை மேலும் குறைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதிக்கலாம். தொற்று குறையாத 8 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படலாம், அவ்வாறு நீட்டிக்கப்படும் பட்சத்தில் பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குதல், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குதல், மேலும் மற்ற தொழில்களுக்குத் தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x